போன் செய்தால் போதும்... பிரியாணி போல் பெட்ரோல், டீசலும் டோர் டெலிவரி.. பெங்களூரில் அசத்தல்!
பெட்ரோல் பங்குகளில் மணிக்கணக்கில் நிற்பதை தடுக்க பெட்ரோல், டீசல் வீடு தேடி வரும் திட்டத்தை மத்திய அரசு அனுமதியோடு ஒரு நிறுவனம் தொடங்கியுள்ளது.
டெல்லி: பெட்ரோல், டீசலை வீட்டு வாசலே கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருவதை அடுத்து பெங்களூரில் அந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மளிகை பொருள்கள், காய்கறிகள், உணவு பொருள்கள், பூ, பழங்கள் உள்ளிட்டவை நம் வீட்டுக்கே வருகின்றன. போன் செய்தால் போதும் அவை அனைத்தும் வந்துவிடும். அயர்ன் செய்ய துணிகளும் கூட வீட்டுக்கே வந்து எடுத்து சென்று துவைத்து, இஸ்திரி செய்து டெலிவரி செய்கின்றனர்.
அந்தளவுக்கு இயந்திரமயமான வாழ்க்கை வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. கரெண்ட் பில், போன் பில், வாடகை, இன்டர்நெட் பில் என அனைத்தும் நாம் வீட்டிலிருந்தபடியே செலுத்தி வருகிறோம். துணி மணி, நகை நட்டு, சோப்பு சீப்பு என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கே பெற்றுக் கொள்கிறோம்.
பெட்ரோல் பங்குகளில்...
எத்தனை வசதிகள் இருந்தாலும், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை நாம் காத்திருந்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் பீக் அவர்ஸில் கேட்கவே வேண்டாம். கூட்டம் அலைமோதும். இதை தவிர்க்க, நாட்டை டிஜிட்டல்மயமாக்க பால், பேப்பர் போல் பெட்ரோல், டீசலும் உங்கள் வீடு தேடி வரும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.
பெங்களூரில் தொடக்கம்
அதன்படி பெங்களூரில் அரசு அங்கீகாரம் பெற்ற ஏஎன்பி எரிபொருள் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி முறையை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு மைபெட்ரோல்பம்ப் என்று பெயரிட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. http://mypetrolpump.com என்ற இணையதளத்தில் வீட்டு முகவரி, எத்தனை லிட்டர் வேண்டும், எப்போது வேண்டும் என்ற தகவல்களை பதிவு செய்துவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால் போதும்.
வருவார்கள்...ஊற்றுவார்கள்
இஸுசு லாரிகளில் பெட்ரோல் , டீசல் எடுத்துக் கொண்டு குறித்த நேரத்தில் வண்டிகளுக்கு எரிபொருளை நிரப்பி விட்டு போய் கொண்டே இருப்பார்கள். இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால், பெட்ரோல் பங்க்குகளில் விற்கப்படும் விலைக்கே கிடைக்கும். ஆனால் டெலிவரி சார்ஜ் மட்டும் பெட்ரோலின் அளவுக்கு ஏற்பட வசூலிக்கப்படும்.
போனும் செய்யலாம்
7880504050 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம். ஒவ்வொரு ஆர்டரும் குறைந்தது 20 லிட்டராவது இருக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், வாடிக்கையாளர்கள், அபார்ட்மெண்ட்ஸ், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு இந்த சேவை பயனளிக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
99 ரூ. சார்ஜ்
100 லிட்டருக்கு பெட்ரோலோ, டீசலோ ஆர்டர் செய்தால் அதற்கு ரூ.99 சர்வீஸ் சார்ஜ் வரும். அதற்கு மேல் வாங்கும் ஒவ்வொரு லிட்டருக்கும் ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நிறுவனம் செயல்படவுள்ளது. ஆரம்பித்த உடனேயே 16 பள்ளிகள் இவர்களின் ரெகுலர் கஸ்டமராகிவிட்டன.
பெங்களூர் முழுக்க...
பெங்களூருவில் இப்போதைக்கு எச்எஸ்ஆர் லேஅவுட், கோரமங்களா, பெல்லந்தூர், பிடிஎம் லேஅவுட், பொம்மனஹள்ளி போன்ற முக்கியமான இடங்களில் சர்வீஸ் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் பெங்களூரு முழுக்க பெட்ரோல் டெலிவரி செய்யப்படவுள்ளது.