சமையல் குக்கரில் குண்டு.. மைசூர் கோர்ட் குண்டுவெடிப்பை விசாரித்த அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
மைசூர்: சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரஷர் குக்கரை பயன்படுத்தி, மைசூர் கோர்ட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மைசூரின் மையப்பகுதியிலுள்ள லட்சுமிபுரத்தில் இயங்கிவரும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், பொதுமக்கள் பயன்படுத்தும் டாய்லெட்டில் நேற்று மாலை குண்டு வெடித்தது. மாணவன் உட்பட 2பேர் இதில் காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தில்லை.
குண்டு வெடித்ததால் டாய்லெட் கதவுகள் பல உடைந்தன. தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் சுக்கு நூறாகின. சுவரும் விரிசல் விட்டிருந்தது. புகை மண்டலமாக அந்த இடம் காட்சியளித்ததாகவும், டிரான்ஸ்பார்மர் வெடித்திருக்கலாம் என்றுதான் முதலில் தாங்கள் நினைத்தோம் என்றும், நேரில் கண்ட சாட்சிகள் சிலர் கூறியுள்ளனர்.
விசாரணை நடத்திய அதிகாரிகள் அது சக்தி குறைந்த குண்டு என்றும், குக்கருக்குள் குண்டு வைத்து வெடிக்க செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர். பீகார் மாநில நீதிமன்றம் ஒன்றில் இதே மாதிரியில் முன்பு குண்டு வெடித்ததையும் நினைவு கூறுகிறார்கள் அதிகாரிகள்.
சம்பவ இடத்தில், தோட்டா பவுடர், பேட்டரி செல்கள், வயர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
"மைசூர் கோர்ட் ஒன்றில் குண்டு வெடிப்பது இதுதான் முதல் முறை. பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. மேலும் கோர்ட் வளாகத்தில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படவில்லை என்பது துரதிருஷ்டமாகும்" என்று மைசூர் பார் கவுன்சில் தலைவர் சந்திரமவுலி தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தை டிஜி மற்றும் ஐஜிபியான ஓம் பிரகாஷ், ஏடிஜிபி பாஸ்கர் ராவ், கர்நாடக தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி, மைசூர் போலீஸ் கமிஷனர் பி.தயானந்த் ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர்.
இத்தாக்குதலை நடத்த என்ன காரணம், இதில் ஏதேனும் அமைப்புகளுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.