மணிப்பூரில் முதல் முறையாக பாஜக ஆட்சி.. முதல்வராக பிரேன் சிங் பதவியேற்பு
மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இன்று பதவியேற்றுக் கொண்டார். அதேபோல் துணை முதல்வராக என்பிபி கட்சியைச் சேர்ந்த ஒய்.ஜாய்குமாரும் பதவியேற்றார்.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராக பிரேன் சிங் இன்று மதியம் 2 மணி அளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளில் காங்கிரஸும், 21 தொகுதிகளில் பாஜகவும் கைப்பற்றியது.
31 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும் என்பதால் அங்குள்ள உதிரிக்கட்சிகளின் துணைக் கொண்டு ஆட்சியை பிடிக்க இரு கட்சிகளும் முட்டி மோதின. கடைசியாக பாஜக வென்றது.
தலா 4 எம்எல்ஏ-க்களைக் கொண்ட சங்கமாவின் நாகா மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும், ஒரு எம்எல்ஏவைக் கொண்ட லோக் ஜனசக்தி கட்சியும், சுயேச்சைகளும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து மணிப்பூர் சட்டசபை பாஜக எம்எல்ஏ-க்களின் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேன் சிங் முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றனர்.
நாகா மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒய்.ஜாய்குமார் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.