பெங்களூர் வந்தார் மோடி.. பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை.. !
பெங்களூரு: பெங்களூரில் 2 நாள் நடைபெற உள்ள பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்தரி மோடி இன்று பெங்களூர் வந்து சேர்ந்தார்.
மாலையில் அவர் பாஜக முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பெங்களூருவில் நாளை (ஏப்ரல் 3) மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல் 4) ஆகிய இரண்டு நாட்கள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று பெங்களூரு வந்து சேர்ந்தார். 3 நாட்கள் அவர் பெங்களூரில் இருப்பார்.
பெங்களூர் வந்த மோடியை கர்நாடக ஆளுநர் வஜுபாய் வலா, முதல்வர் சித்தராமையா, பாஜக தேசிய துணைத் தலைவர் எதியூரப்பா உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். வரவேற்புக்குப் பின்னர் ராஜ்பவன் சென்ற மோடி மாலையில் லலித் அசோக் ஹோட்டலுக்குச் சென்று, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நாளை காலை 10 மணிக்கு தேசிய செயற்குழு கூட்டம் துவங்குகிறது. இதில் பாஜக தலைவர் அமீத் ஷா, பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அன்று மாலை 5 மணிக்கு பசவனகுடியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உட்பட பலரும் பேசுகின்றனர்.
அத்வானிக்கு பேச அனுமதி கிடையாது
இதற்கிடையே தேசிய செயற்குழுவில் பேசுவோர் பட்டியலில் அத்வானியின் பெயர் இடம் பெறவில்லை. இதற்கு முன்பு நடந்த அனைத்து தேசிய செயற்குழுக் கூட்டங்களிலும் அத்வானி பேசியுள்ளார். ஆனால் மோடி பிரதமராக வந்த பின்னர் அத்வானிக்கு முக்கியத்துவம் குறைந்து கொண்டே போகிறது. இப்போது பேசக் கூட அனுமதிக்கப்படாத நிலைக்கு அத்வானி தள்ளப்பட்டுள்ளார்.