'அம்மா’வின் ஆசைப்படி... போனிலேயே குழந்தைக்கு ‘வைபவி’ எனப் பெயர் வைத்த மோடி
மிர்சாபூர்: பெற்றோரின் விருப்பத்தின் பேரில், உத்திரப்பிரதேசத்தில் இரண்டு மாத பெண் குழந்தை ஒன்றிற்கு போனிலேயே பெயர் வைத்துள்ளார் பிரதமர் மோடி.
உத்தரப்பிரதே மாநிலம் மிர்சாப்பூர் அருகில் உள்ளது நயபுரா ஹன்சிபூர் கிராமம். இந்தக் கிராமத்தில் வாழ்ந்து வரும் விவசாயி பாரத் சிங்கின் மனைவி விபா சிங். கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி இந்தத் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு பிரதமர் மோடி பெயர் வைக்க வேண்டும் என பாரத் சிங்கும், அவரது மனைவியும் விரும்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக பிரதமருக்கு விபா சிங் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரத் சிங்கின் செல்போனிற்கு அழைப்பு வந்துள்ளது. அதில், 'மைன் நரேந்திர மோடி போல் ரஹா ஹும்' என இந்தியில் மோடி பேசியுள்ளார். மேலும், பாரத் சிங்கின் குழந்தைக்கு வைபவி எனப் பெயரிடும் படியும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் பேசியது பிரதமர் தானா எனக் குழம்பிப் போன பாரத் சிங், இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த இளைஞர் திடுக்கிட்டு, அதிர்ந்து, இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள் முழுவதுமாக பேசி முடித்து அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
பின்னர் தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார் பாரத். அப்போது தன்னுடன் பேசியது பிரதமர் தான் என்பது அவருக்கு உறுதியாகியுள்ளது.
ஆனால், இது குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவர் கூறியபோது, அதனை நம்ப அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் மீண்டும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட பாரத், பிரதமர் போனில் தனது குழந்தைக்கு பெயர் வைத்த விபரத்தை கடிதம் வாயிலாக கேட்டுள்ளார்.
பாரத்தின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் அலுவலகமும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
பாமர மக்களின் வேண்டுகோளை ஏற்று போனில் குழந்தைக்கு மோடி பெயர் வைத்த சம்பவம் தான் உத்திரப்பிரதேசம் முழுவதும் தற்போது பேச்சாக உள்ளது.
உத்தரப் பிரதேச சட்டசபைக்கு விரைவில் பொதுத் தேர்தல் நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.