முஸ்லிம்கள் நுழைய தடை... டொனால்டு டிரம்ப்பின் சர்ச்சை பேச்சு பற்றி பதிலளிக்க மறுத்த மோடி
டெல்லி: அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிப்போம் என அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளருக்கான தேர்வு பட்டியலில் முன்னணியில் இருக்கும் குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்த யோசனைக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ளது.
இதற்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். இதையொட்டி அந்நாட்டின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழுக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
பதிலளிக்க மறுப்பு
அந்த பேட்டியில் முஸ்லிம்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் பேச்சு குறித்து மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தேர்தல் பிரசாரத்தில் முன்வைக்கப்படும் விவகாரங்கள் இவை.... இதற்கு ஒரு அரசு எப்படி பதில் அளிக்க முடியும்? தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு விவகாரங்கள் முன்வைக்கப்படும். யார் என்ன சாப்பிடுகின்றனர்? யார் என்ன குடிக்கின்றனர்? என்றெல்லாம்கூட பேசுவார்கள். அதுபோன்ற அனைத்து விஷயங்களுக்கும் நான் எப்படி கருத்து கூற முடியும்? எனக் கூறியுள்ளார்.
முஸ்லிம்களுக்குப் பாராட்டு
இதனிடையே பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரானவர்களாக இந்திய முஸ்லிம்கள் செயல்படுகின்றனர் என்று அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய வெளியுறவுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை இணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் பதிலளித்தார்.
இந்த கூட்டத்தில் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு முதலீடுகள் வருவது குறித்து கிரிஸ் மர்ஃபி என்ற எம்.பி. தனது கவலைகளை வெளியிட்டார். இதற்கு பதிலளித்த நிஷா தேசாய், பயங்கரவாத விவகாரங்களுக்காக நிதி வருவதைக் கண்டறியும் விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றி நாம் பெருமளவில் வெற்றியடைந்து வருகிறோம். வளைகுடா நாடுகள் மட்டுமல்லாது, பயங்கரவாதத்துக்காக வேறு எங்கிருந்து பணம் வந்தாலும் அதை இந்தியர்களே தடுத்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இந்திய முஸ்லிம்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றார்.