நம்ம ஊர் இட்லியும் தோசையும்தான் மோடியின் 'ரெகுலர் டிபன்'
டெல்லி: நானும் சாப்பிட மாட்டேன், மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன், நானும் தூங்க மாட்டேன், மற்றவர்களையும் தூங்க விட மாட்டேன் என்பது மோடிக்கு சரியாக பொருந்தும்.
இவர் எப்போது சாப்பிடுகிறார், எப்போது தூங்குகிறார் என்பதே யாருக்கும் தெரியாது.
வேலை, வேலை, எப்போதும் வேலைதான் மோடியின் முழு நேர வேலையாகி விட்டது.
மோடியின் எனர்ஜி ரகசியம்:
ஆனால் அசாத்தியமான மன பலம் மற்றும் உடல் திடத்துடன் மோடி திகழ்கிறார் என்றால் அதற்கு ஒரு பின்னணி உள்ளது. அவர் ஒரு சமையற்காரர்... நம்ப முடியவில்லை அல்லவா.. ஆனால் உண்மைதான்.
பத்ரி மீனா எனும் "மேஜிக்" சமையல்காரர்:
பத்ரி மீனா என்ற மோடியின் சமையல்காரர்தான் மோடி இவ்வளவு சுறுசுறுப்பாக, உறுதியாக வேலை பார்க்க முக்கியக் காரணம்.
ஆஸ்தான சமையல் மாஸ்டர்:
இன்று நேற்று அல்ல கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்தே பத்ரி மீனாதான் மோடியின் ஆஸ்தான சமையல்காரராக இருக்கிறார். இவரது கையால் சாப்பிட்டுத்தான் இத்தனை எனர்ஜியோடு வேலையில் வெளுத்து வாங்கி வருகிறார் மோடி.
13 வருட சமையல் ரகசியம்:
கடந்த 13 வருடமாக மோடியின் சாப்பாட்டு விஷயத்தை பத்ரிமீனாதான் பார்த்துக் கொள்கிறார். தற்போது மோடி பிரதமரான பின்னர் மோடியின் முக்கியமான வட்டத்திற்குள் இவரும் வந்து விட்டார்.
வெறும் 37 வயதுதான்:
இத்தனைக்கும் பத்ரிக்கு 37 வயதுதான் ஆகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர். பத்ரி மோடியிடம் வந்து சேர்ந்த கதை வித்தியாசமானது.
குஜராத்துக்கு இடம்பெயர்வு:
20 வருடங்களுக்கு முன்பு பத்ரியும் அவரது நண்பர்கள் தினேஷ் மீனா, சூரஜ் மீனா ஆகியோர் குஜராத்துக்கு இடம் பெயர்ந்து வந்தனர். பிலக் என்ற இடத்தில் வேலை பார்ப்பதற்காக வந்தனர்.
பக்கத்தில் இருந்து பராமரிப்பு:
அதன் பிறகு மோடியின் அறிமுகம் கிடைத்து, மோடிக்கு இவரது சாப்பாடு பிடித்து ஆஸ்தான சமையல்காரராகி விட்டார் பத்ரி. வெறுமனே சமைப்பது மட்டும் இவரது வேலையல்ல. நேரா நேரத்துக்கு மோடிக்கு சாப்பாடு போகிறதா, அதை அவர் சரியாக சாப்பிடுகிறாரா என்பதையும் கவனிக்கிறார் இவர். சில நேரங்களில் விஐபிக்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடந்தால் நேரடியாக இவரே இருந்து பார்த்துக் கொள்கிறார்.
விருந்துகளின் முழுப்பொறுப்பு:
சீன அதிபர் ஜி ஜின்பிங் அகமதாபாத் வந்திருந்தபோது அவருக்கான விருந்தை கவனித்துக் கொள்ளும் முழுப் பொறுப்பையும் பத்ரியிடம்தான் கொடுத்திருந்தாராம் மோடி.
சைவம் சமையல் மட்டும்தான்:
மோடி சுத்த சைவப் பிரியர் ஆவார். எனவே அவருக்குத் தேவையான சத்தான உணவு வகைகள், ஸ்பைஸி அல்லாத உணவுகளை கொடுப்பதில் கவனமாக இருக்கிறார் பத்ரி.
இட்லி, தோசைதான் விருப்பம்:
வி்சேஷம் என்னவென்றால் மேற்கு இந்தியாவிலிருந்து வந்தவரான மோடி காலையில் தினசரி சாப்பிடுவது தென்னிந்திய உணவு வகைகளாம். அதாவது இட்லி, தோசை போன்றவற்றைத்தான் காலையில் விரும்பிச் சாப்பிடுகிறாராம் மோடி.
மூன்று முறை கிச்சடி:
வாரத்திற்கு மூன்று முறை கிச்சடி சாப்பிடுவாராம். அதேபோல குஜராத்தி உணவு வகைகளையும் அதிகம் விரும்பிச் சாப்பிடுவாராம்.