மோடிக்குப் பிடிக்கவில்லை... "மதமாற்றங்களை" நிறுத்தி வைக்க வி.எச்.பி. தலைவர்கள் உத்தரவு!
சூரத்: நாட்டின் சில பகுதிகளில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்தி வரும் மதமாற்ற நிகழ்வுகளால் பிரதமர் நரேந்திர மோடி எரிச்சலைடந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் நூற்றுக்கணக்கான பழங்குடியின கிறிஸ்தவர்களை இந்து மதத்திற்கு வி.எச்.பியினர் மதமாற்றம் செய்த நிகழ்ச்சியால் அவர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து மத மாற்ற நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தனது அமைப்பினருக்கு வாய் மொழி உத்தரவை விஎச்பி தலைவர்கள் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற்றம் நிகழ்ச்சிகளை விஸ்வ இந்து பரிஷத் நடத்தி வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தாலிபான்கள் போல விஎச்பி நடந்து கொள்வதாக காங்கிரஸ் வர்ணித்துள்ளது.
கர் வாப்சி என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியால் சிறுபான்மையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியும், அரசு மீது கடும் அதிருப்தியும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமையன்று குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம், அர்னய் கிராமத்தில் 500 பழங்குடியின கிறிஸ்தவர்களை இந்து மதத்திற்கு மாற்றும் நிகழ்ச்சியை நேற்று விஎச்பி நடத்தியது. இது பிரதமர் மோடியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் விஎச்பி தலைவர்களைத் தொடர்பு கொண்டு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டாராம். இதில் தனக்கு மகிழ்ச்சி இல்லை, உடன்பாடு இல்லை என்று அவர் கூறினாராம். இதையடுத்து இதுபோன்ற மத மாற்ற நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு விஎச்பி உயர் மட்டத் தலைவர்கள் தங்களது அமைப்பினருக்கு வாய்மொழி உத்தரவி்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று விஎச்பியின் சர்வதேச தலைவர் பிரவீன் டொகாடியா கூறியுள்ளார்.
நிலைமை இப்படி இருக்க நேற்று மட்டும் மத்தியப் பிரதேசத்தில் 6 லட்சம் மதம் மாறிய இந்துக்கள், தாய் மதத்திற்குத் திரும்பியதாக விஎச்பியின் மத்தியப் பிரதேச கிளை கூறியுள்ளது. கேரளாவிலும் நேற்று 30 பேரை மதம் மாற்றியுள்ளனர்.
மதமாற்ற விவகாரத்தில் சிறுபான்மையினர் இடையே பாஜக ஆட்சிக்கு கடும் கெட்டப் பெயர் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்தே மோடி, விஎச்பி தலைவர்களை ஒரு பிடி பிடித்ததாக கூறுகிறார்கள்.