மே மாதம் சீனா செல்கிறார் பிரதமர் மோடி: சுஷ்மா சுவராஜ் தகவல்
பீஜிங்: பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் சீனா செல்லவுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் பயணமாக சீனா சென்றுள்ளார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். அங்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்-யி-யுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் சுஷ்மா.
அப்போது அவர், ‘வரும் மே மாதம் பிரதமர் மோடி சீனா வர இருப்பதாகத்' தெரிவித்தார். ஆனால், எந்த தேதியில் மோடி சீனா வருகிறார் என்பது தொடர்பாக இறுதி முடிவெடுத்த பின்னர் சீன அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் படும் என்றார்.
மேலும், மோடியின் சீன பயணம் தொடர்பான பணிகள் நிமித்தமாகவே தான் சீனா வந்துள்ளதாகவும் சுஷ்மா தெரிவித்தார்.
இந்தியாவின் 66வது குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக கடந்தவாரம் இந்தியா வந்திருந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இதனால் கவலையடைந்துள்ள சீனாவை சமாதானப் படுத்தும் முயற்சியாகவே மோடி அந்நாட்டிற்கு செல்வதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.