நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான சொத்துகளை அபகரிக்க முயற்சித்ததாக சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமராக ஜவாஹர்லால் நேரு இருந்தபோது காங்கிரஸ் ஆதரவு செய்திகளை வெளியிடுவதற்காக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. நிர்வாகச் செலவுகளுக்காகவும், நஷ்டத்தை தவிர்க்கவும் அப் பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சிக்கு வந்த நன்கொடையில் இருந்து ரூ.90 கோடி அளிக்கப்பட்டது.
கடனை அடைத்ததற்குப் பிரதிபலனாக நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை யங் இந்தியன் என்ற நிறுவனத்தின் வாயிலாக சோனியா, ராகுல் உள்ளிட்டோர் அபகரித்தனர் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யக் கோரி சோனியா, ராகுல் உட்பட 5 பேருக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.