நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் இன்று நேரில் ஆஜர்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இன்று டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளனர்.
நாட்டின் முதலாவது பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டதுதான் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது. இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் 90 கோடி ரூபாய் வரை கடன்களை பெற்றிருந்தது.
கட்சி விதிகளை மீறி இந்த கடன்களை தீர்க்க முடியாமல், அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில், சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி 90 கோடி ரூபாயை அப்பத்திரிகைக்கு அளித்து, கடனை அடைத்தனர்.
இதனிடையே நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கையகப்படுத்தி அதன் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொருளாளர் மோதிலால் வோரா, செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சோனியாவும் ராகுலும் கடந்த 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அவரது தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி, சோனியா நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி மனு செய்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்று சோனியாவும் ராகுலும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தர விட்டார். அதன்படி இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முதல்வர்கள், மாநில தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் பெறலாம். அதே நேரம் அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், நீதிமன்றம் அவர்களை சிறைக்கும் அனுப்பலாம் என்றும் கூறப்படுகிறது.