உயிரிழந்த ஒடிசா தொழிலாளர்களுக்கு ரூ. 5 லட்சம்- நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: சென்னையில் நடந்த அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த ஒடிசா மாநில கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக தரப்படும் என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
இதுவரை இந்த விபத்தில் 4 ஒடிசா தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலியான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேருடைய குடும்பத்தினருக்கும் கருணைத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஒடிசா மாநில தொழிலாளர் துறை செயலாளரை தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளுமாறும் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளார்.