கடற்படை, கடலோர காவற்படையில் சேர்ந்த துடிப்பான இளம் வீரர், வீராங்கனைகள்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்த இளம் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது.
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் எழிமலாவில் இந்திய கடற்படை அகாடமி செயல்பட்டு வருகின்றது. அந்த அகாடமியில் பயிற்ச்சி பெற்று தேர்ச்சி அடைந்த இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி அரூப் ராஹா கலந்து கொண்டு பயிற்ச்சியின்போது சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில்,
பணியின்போது நீங்கள் சந்திக்கும் சவால்களை வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்திய கடற்படை அகாடமியில் அளிக்கப்பட்டுள்ள உயர்தர பயிற்சி நீங்கள் நாட்டை சிறப்பாக பாதுகாக்க உதவும் என்றார்.
சுமார் 320 பேர் அகாடமியில் பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படையில் பணியாற்ற உள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 28 பெண்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.