முறுக்கி நிற்கும் சிவசேனா: வெளியிலிருந்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பவார் கட்சி
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க அக்கட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயார் என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 110க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றினாலும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. இதனால் கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தங்கள் கட்சியை சேர்ந்தவர் தான் முதல்வர் என்று பாஜகவும், என்ன நடந்தாலும் நான் தான் முதல்வர் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் தெரிவித்துள்ளனர்.
ஆட்சி அமைக்க பாஜக சிவசேனாவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பாஜகவுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தேசியவாத காங்கிரஸ் முன்வந்துள்ளது. இதன் மூலம் பாஜக சிவசேனாவிடம் கூட்டணி வைக்காமலேயே ஆட்சிக்கு வர முடியும்.
இந்நிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல் கூறுகையில்,
மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். அதனால் பாஜகவுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றார்.