போதை பொருட்களின் ஆதிக்கம் பெருகியதே கூட்டு குடும்பம் அழிய காரணம்... பிரணாப்
டெல்லி: முன் எப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் போதை பொருட்களின் ஆதிக்கம் பெருகி விட்டதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று சர்வதேச போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தின விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இத்துறைகளில் சிறப்பாக களப்பணியாற்றியவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:-
இலக்கை அடையவில்லை...
போதையில் அடிமையானவர்களை காப்பாற்ற ஏற்படுத்தப்பட்ட மறுவாழ்வு திட்டம் இன்னும் அதன் இலக்கை அடையவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுவிக்கவில்லை.
தற்போதைய தேவை...
எனவே, அவர்களையும் நாட்டிற்கு இந்த சமூகத்திற்கு பயனுள்ள மனிதர்களாக மாற்ற வேண்டும். அதுவே தற்போதைய தேவை.
கூட்டு குடும்பமுறை அழிந்து விட்டது...
முன் எப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் போதை பொருட்களின் ஆதிக்கம் பெருகி விட்டன. இதனால், இன்று சமூக மதிப்புகளும், சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவை மறைந்து கூட்டு குடும்ப முறையும் அடியோடு ஒழிந்துவிட்டது.
ஒரே வழி...
போதை பொருட்கள் கிடைக்கும் வழிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்த ஆதிக்கத்தை தடுத்துவிட முடியாது. சமூக சூழ்நிலைகளும் இதற்கு காரணமாக உள்ளது' என இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார்.