நீட் தேர்வில் இருந்து விலக்கு.. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் புதிய சிக்கல்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களுக்குத் தலைவலி அதிகரித்துள்ளது.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இருக்கக் கூடாது என மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்தது. இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் கருத்துக் கேட்டது.
இதற்குப் பதில் அளித்த வேணுகோபால், இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து விட்டதால் தமிழகத்துக்கு மட்டும் அதில் இருந்து விலக்கு அளிப்பது நல்ல தல்ல என்றும் ஒப்புதல் அளித்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இவரது இந்தக் கருத்தால் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான மத்திய அரசு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு மனிதவள மற்றும் சட்டத்துறை அமைச்சகங்கள் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.