நீட் வழக்கு: தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை நடத்த செவ்வாய்க்கிழமை வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: இருதரப்பு மாணவர்களும் பாதிக்காத வண்ணம் தீர்வு காண தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை தொடங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை இன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, தமிழக அரசின் சட்ட வரைவு குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது.
இசைவு வழங்கப்பட்டுவிட்டதா?
இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜராக முடியாததால் அவருக்கு பதிலாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார். அப்போது அவரிடம் அவசர சட்டத்துக்கு இசைவு வழங்கப்பட்டுவிட்டதா என்று நீதிபதிகள் கேட்டனர். மேத்தா கூறுகையில் நீட் அவசர சட்டம் குறித்து ஆகஸ்ட் 22-க்குள் ஒப்புதல் வழங்கப்படும். அவசர சட்டத்தை பிறப்பிக்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்றார்.
4 லட்சம் மாணவர்கள் பாதிப்பர்
இதைத் தொடர்ந்து தமிழக அரசு தன் வாதத்தை முன் வைத்தது. அப்போது நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் தமிழகத்தைச் சேர்ந்த 4 லட்சம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர். மேலும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது. கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகவே இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது என்று தமிழக அரசு தன் வாதத்தை முன் வைத்தது.
என்ன பரிகாரம்?
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறுகையில், நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தக் கூடாது என்றால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு என்ன பரிகாரம் செய்யபோகிறீர்கள். இரு தரப்பு மாணவர்களும் பாதிக்கப்படாத வண்ணம் தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இடைக்காலத் தடை
அதற்கேற்ப புதிய திட்டத்துடன் வருமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். மேலும் இந்த வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை நடத்த இடைக்காலத் தடையையும் நீதிபதிகள் விதித்தனர்.