சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்த நேருவின் தங்கை மகள் நயன்தாரா ஷாகல்
டெல்லி: முன்னாள் பிரதமர் நேருவின் தங்கை மகள் நயன்தாரா ஷாகல் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தங்கையின் மகள் நயன்தாரா ஷாகல். அவர் எழுதிய ரிச் லைக் அஸ்(1985) என்ற ஆங்கில நாவலுக்காக அவருக்கு கடந்த 1986ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 88 வயதாகும் அவர் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆட்சியாளர்கள் பாசிச கொள்கையை கடைபிடிக்கிறார்கள். அது எனக்கு கவலையை அளித்துள்ளது. இதுவரை நம் நாட்டில் பாசிச அரசு இருந்தது இல்லை. மூடநம்பிக்கைகள் பற்றி கேள்வி எழுப்புபவர்கள், இந்துத்துவா பற்றி கேள்வி கேட்பவர்கள், உணவு பழக்கவழக்கம் அல்லது வாழ்க்கைமுறை பற்றி கேள்வி கேட்பவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள்.
அண்மையில் முகமது அக்லாக் என்பவர் அவரது வீட்டில் மாட்டிறைச்சி சமைத்ததாக சந்தேகித்து பிசாதா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து இழுத்து வரப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயங்களில் எல்லாம் நீதி இழுத்துக் கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தின் ஆதிக்கம் பற்றி பிரதமர் அமைதியாக உள்ளார். அவரது கொள்கைகளை ஆதரிக்கும் தீயவர்களை அவர் தனிமைப்படுத்த மாட்டார் என்று நாம் யூகித்துக் கொள்ள வேண்டியது தான். சாகித்ய அகாடமி அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.
கொலை செய்யப்பட்ட இந்தியர்களின் நினைவாகவும், எதிர்ப்பை தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்கும் இந்தியர்களை ஆதரிக்கவும், தங்களின் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு பயத்தில் வாழும் அனைவருக்காகவும் நான் சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நன்கு பேசத் தெரிந்த அரசியல்வாதி மோடி. அவர் நீண்ட உரையாற்றுவார். ட்விட்டர் மற்றும் பிற சமூகவலைதளங்களில் பேசுவார். நாட்டில் நடந்து வருபவைக்கு அவர் தான் பொறுப்பு. மோடியின் ஆட்சியில் இந்தியா பின் நோக்கி செல்கிறது. கலாச்சார பன்முகத்தை நிராகரித்துவிட்டு இந்துத்துவாவை நோக்கி செல்கிறது என்றார்.