எவரெஸ்ட்டில் ஏற சென்ற ஹைதராபாத் பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் மாயம்... பனிச் சரிவில் சிக்கினாரா?
ஹைதராபாத்: ஹைதராபாத்திலிருந்து எவரெட்ஸ் சிகரத்தில் ஏறுவதற்காக சென்ற பெண் சாப்ட்வேர் என்ஜீனியரை, அடிவார முகாமிலிருந்து காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
28 வயதான நீலிமா புடோட்டாவின் நிலை என்ன என்று தெரியாமல் அவரது பெற்றோரும், குடும்த்தினரும் தவித்து வருகின்றனர். தெற்கு அடிவார முகாமில்தான் அவர் தங்கியிருந்தார். அந்தப் பகுதியில் நிலநடுக்கத்தின் போது கடும் பனிச் சரிவு ஏற்பட்டதில், அதில் நீலிமா உள்ளிட்டோர் சிக்கிக் கொண்டனரா என்பது தெரியவில்லை.
இதுகுறித்து நீலிமாவின் பெற்றோர் கூறுகையில், சனிக்கிழமை காலை நீலிமா எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தான், 4500 அடி உயரத்தில் இருப்பதாக கூறினார். அதன் பிறகு அவரிடமிருந்து தகவல் இல்லை என்றனர்.
மலையேற்ற ஏற்பாட்டுக் குழுவினர் கூறுகையில், நீலிமாவும் அவரது குழுவினரும் பத்திரமாக இருக்கலாம் என நம்புகிறோம். இருப்பினும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றனர்.
காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் நீலிமா. இந்தியாவிலிருந்து அவர் உள்பட 3 பேர் மலையேற்றத்திற்காக தேர்வு செய்து எவரெஸ்ட் முகாமுக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். வெரம்ப்ளர்ஸ் என்ற நிறுவனம்தான் இந்த மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஏப்ரல் 19ம் தேதி அவர் டெல்லியிலிருந்து காத்மாண்டு புறப்பட்டுச் சென்றார்.
நீலிமாவின் தந்தை செளரய்யா கூறுகையில், அவசர கால தொலைபேசி ஒன்றின் மூலம் கடைசியாக எங்களிடம் பேசினார் நீலிமா. அவரது குரல் மிகவும் சோர்வாக காணப்பட்டது என்றார்.
எவரெஸ்ட் சிகரப் பகுதியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பனிச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. பனிச் சரிவில் அடிவார முகாமின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.