மேற்கு வங்கத்தில் 100 எம்எல்ஏக்கள் 'கோடீஸ்வர குபேரர்கள்' 20 சதவீதம் பேர் வருமான வரியே கட்டவில்லையாம்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபையில் இடம்பெற்றுள்ள 294 உறுப்பினர்களில், 100 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். முதல் பத்து இடங்களில் உள்ள கோடீஸ்வரர்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏம்எல்ஏ.க்களே உள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.
மேற்குவங்க சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 294 எம்எல்ஏ.க்களின் சொத்து விவரங்களை ‘வெஸ்ட் பெங்கால் எலெக்ஷன் வாட்ச்' நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தங்தாங்ரா தொகுதி எம்எல்ஏ சமிர் சக்ரபோர்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு 40 கோடியாம். ரொக்க கையிருப்பு, வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை, முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்கள் உட்பட அனைத்தும் இதில் அடங்கும்.
இந்நிலையில், குறைந்த சொத்து வைத்திருக்கும் எம்எல்ஏவும் சட்டசபையில் இடம்பெற்றுள்ளார். கிழக்கு பன்ஸ்குரா தொகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ இம்ராகிம் அலி தான் அவர். அவரின் தற்போதைய கையிருப்பு ரூ,1000 மட்டும் தானாம். எனினும், இவர் தனது வங்கிக் கணக்கில், ரூ.48,703 உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தார். அவர் தான் ஒரு சமூக சேவகர் என்றும், தனக்கு எந்தவித சொத்துகளோ, இடங்களோ இல்லை என்றும் கூறி வருகிறார்.
இவரைப் போலவே, ரூ.75,000 மட்டுமே சொத்து வைத்திருக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ புந்தரிக்காக்ஷய சாஹாவும் இதே சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ளார்.
மேற்குவங்க சட்டசபையில் சராசரியாக ஒரு எம்எல்ஏ.வின் சொத்து மதிப்பு ரூ.1.46 கோடியாம். மேலும், சட்டசபையில் இடம்பெற்றுள்ள 294 உறுப்பினர்களில், 100 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளார்கள். முதல் பத்து இடங்களில் உள்ள கோடீஸ்வரர்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏம்எல்ஏ.க்களே உள்ளனர். முக்கியமாக மொத்தமுள்ள எம்எல்ஏ.க்களில் 20 சதவீதம் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.