ஸ்பெக்ட்ரம் வழக்கில் மிரட்டல் புகார்- டிராய் முன்னாள் தலைவர் குற்றச்சாட்டை மறுக்கும் மன்மோகன்சிங்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் தம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என்று மிரட்டியதாக டிராய் முன்னாள் தலைவர் பைஜால் கூறிய குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறுத்துள்ளார்.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். அதில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையில் தம்முடன் ஒத்துழைக்குமாறு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் மிரட்டியதாக பதிவு செய்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் மன்மோகன்சிங் பேசியதாவது:
ஸ்பெட்க்ரம் வழக்கில் பிரதமர் அலுவலகத்தையும் அரசு அதிகாரிகளையும் நான் சுயலாபத்திற்காக பயன்படுத்தவில்லை.
நரேந்திர மோடியின் ஆட்சி ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஏற்றுமதிகள் வெகுவாகக் குறைந்துள்ளது.
விவசாயிகள் துன்பத்தில் உழல்கிறார்கள். பொருளாதாரம் சீரழிந்துள்ளது. ஊழல் பெருகியுள்ளது. தேவையில்லாத பிரச்சனைகளை கொண்டு நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.
எங்களின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமை அடைகிறோம். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் 2-ம் இடத்தில் இருந்தது
இவ்வாறு மன்மோகன்சிங் கூறியுள்ளார்.