மாட்டிறைச்சி தடை கட்டுப்பாடுகளை 3 மாதத்துக்கு அமல்படுத்தமாட்டோம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: மாட்டிறைச்சி தடை தொடர்பான கட்டுப்பாடுகளை 3 மாதங்களுக்கு அமல்படுத்தமாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
மாட்டிறைசிக்கு தடை விதிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை திடீரென மத்திய அரசு விதித்தது. இந்த தடைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்தது. இதேபோல உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடையை உச்சநீதிமன்றமும் நீட்டித்தது.
இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தரப்பில், புதிய கட்டுப்பாடுகளை 3 மாத காலத்துக்கு அமல்படுத்தமாட்டோம்.
பல்வேறு தரப்பினரது கருத்துகளை மத்திய அரசு கேட்டு வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த மாற்றங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வோம் என தெரிவிக்கப்பட்டது.