மத்திய அரசின் மற்றொரு வரி: ஹோட்டல் சாப்பாடு, செல்போன் பில், ரயில் கட்டணம் உயரப்போகிறது
டெல்லி: ஹோட்டல் சாப்பாடு, செல்போன் பில், ரயில் மற்றும் விமான டிக்கெட் கட்டணம் ஜூன் 1ம் தேதி முதல் உயரப்போகிறது. விவசாய நலன் செஸ் (kkc) என்ற பெயரில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள 0.5 வரி ஏற்றம்தான் இதற்கு காரணமாக இருக்கப்போகிறது.
நாட்டில் எந்த பொருளையெடுத்தாலும் வரி வசூலிக்கப்பட்டுவரும் நிலையில் புதுபுதுப் பெயர்களில் புது வரிகளை அறிமுகம் செய்து மக்களின் சட்டைப்பையை ஓட்டை போட்டுக்கொண்டுள்ளது மத்திய அரசு.
தூய்மை இந்தியா செஸ் என்ற பெயரில் சேவை வரி மீது 0.5 சதவீத வரியை கடந்த ஆண்டு அதிகரித்தது மத்திய அரசு. இப்போது விவசாயிகள் நலன் என்ற பெயரிலும் வரி கூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுக்குள் வரி விதிப்பு அளவு 12.36 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துவிட்டதாகவும், இது மக்களுக்கு நெருக்கடியை தரும் என்றும் எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
ஹெச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வரி உயர்த்த உள்ள தகவலை எஸ்எம்எஸ் மூலம் ஏற்கனவே அனுப்பிவிட்டது. சேவைத்துறையின்கீழ் வங்கிகள் வருவதால் வங்கி பயன்பாட்டாளர்களுக்கு வரி ஏற்ற பாதிப்பு இருக்கும் என்பது இதற்கு காரணம்.