அந்தமான் அருகே உருவாகிறது புதிய புயல் அஷோபா!
விசாகப்பட்டினம்: அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மைய அதிகாரி கூறுகையில், "அந்தமான் அருகே வங்கக் கடலில் விசாகப்பட்டினத்தில் இருந்து 1400 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது வலுவடைந்து புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புயலுக்கு ‘அஷோபா' என்று பெயர் சூட்டப்படும்.
இந்த பெயரை இலங்கை தேர்ந்து எடுத்து உள்ளது. இது ஒடிசா முதல் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வரை தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் அதன் வழியை இப்போது கணிக்க முடியாத நிலை உள்ளது. 8 அல்லது 9-ந்தேதி இது புயலாக மாறும் என்று கணிக்க முடிகிறது.
இதேபோல மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகி உள்ளது," என்றார்.
தமிழ்நாட்டில் மழை இன்று எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று கூறியதாவது:
இலங்கை அருகே வானத்தில் காற்றில் மேலடுக்கில் சுழற்சி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று (புதன்கிழமை) தென் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், "ராதாபுரம் 6 செ.மீ., பாபநாசம் 5 செ.மீ., பேச்சிப்பாறை, மதுரை விமானநிலையம் தலா 4 செ.மீ., மதுரை தெற்கு ,ஆயிக்குடி, செங்கோட்டை, ராஜபாளையம் , நாங்குநேரி , சங்கரன் கோவில் , தென்காசி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் பல இடங்களில் தலா 1 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.