4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்: மேகாலயா ஆளுநரானார் தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன்
ஜார்க்கண்ட், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேகாலயா ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சண்முகநாதன் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். அரசியல் அறிவியலில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். எம்.ஏ. அரசியல் அறிவியலில் தங்கப்பதக்கப்பம் பெற்றுள்ளார். திருமணம் செய்து கொள்ளவில்லை. எழுத்தாளராக சண்முகநாதன், ‘தி ரிமார்க்கபிள் பொலிடிக்கல் மூவ்மென்ட், கார்யகர்த்தா நிர்மான்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக 40 ஆண்டுகள் இருந்தவர். கடந்த 2004ஆம் ஆண்டு பாஜகவுக்கு மாற்றப்பட்ட அவர், நாடாளுமன்ற பாஜக அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள அவர் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக ஒடிசாவை சேர்ந்த பாஜக தலைவர் திராபடி முர்மு (56) நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அங்கு ஆளுநராக இருந்த சயீத் அகமது மணிப்பூர் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2011ம் ஆண்டு ஆளுநராக நியமிக்கப்பட்ட சயீத் அகமதுவின் பதவிக்காலம் அடுத்தாண்டு செப்டம்பரில் முடிகிறது.
இதே போல, காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அருணாச்சல பிரதே ஆளுநரான நிர்பாய் சர்மா, மிசோரமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2018ல் முடிகிறது. இவருக்கு பதிலாக ஜே.பி.ரக்கோவா அருணாச்சல பிரததேசத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த திரிபுரா மாநிலத்துக்கு பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ததாகதா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.