ஆப்கானிஸ்தானுக்கான புதிய ஐஎஸ் தலைவர்.. விஸ்வரூபம் எடுக்கும் அபாயம்!
காபூல்: கடந்த 2007ம் ஆண்டு முல்லா சயீத் ஒரக்சாய் என்கிற ஹபீஸ் கான் இப்படிச் சொல்லியிருந்தார் - ஷரியா சட்டத்தை முழுமையாகவும், வெற்றிகரமாகவும் அமல்படுத்த படைகளை நாம் ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டும். இந்த ஹபீஸ்கான்தான் தற்போது ஆப்கானிஸ்தானுக்கான ஐஎஸ்ஐஎஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு தலிபான் தலைவராக இருந்தவர் இந்த ஹபீஸ் கான். தற்போது ஐஎஸ்ஐஎஸ் பக்கம் வந்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கான தலைவராகவும் மாறியுள்ளார். இது நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான் என்று உளவுத்துறையினரும், பாதுகாப்புத் துறையினரும் கூறுகிறார்கள்.
தனக்கு சாதகமான தாலிபானை ஆப்கானிஸ்தானில் கை ஓங்க வைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் ஹபீஸ்கானின் ஐஎஸ்ஐஎஸ் அவதாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் என்று ஐஎஸ்ஐஎஸ் கூறுவதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும். ஆப்கானிஸ்தானுக்கான தலைவராக ஹபீஸ் கான் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் கூட அபாயம் அத்தோடு நின்று விடாது. இப்பிராந்தியம் முழுமைக்கும் அது ஆபத்தைக் கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளன.
யார் இந்த ஹபீஸ் கான்?
42 வயதான ஹபீஸ் கான், தெஹரிக் இ தலிபான் அமைப்பின் மிக மூர்க்கமான போராளிகளில் ஒருவர். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஒரக்சாய் என்ற பழங்குடியின ஊரில் பிறந்தவர். அமெரிக்காவில் நடந்த 9-11 தாக்குதலுக்குப் பின்னர் இவர் தலிபான் அமைப்பில் தீவிரமாக இறங்கினார்.
அமெரிக்கர்களை ஊடுறுவல்காரர்கள் என வர்ணிக்கும் இவர் காபூலுக்கு இடம் பெயர்ந்து அமெரிக்கப் படையினருக்கு எதிராகப் போராடத் தொடங்கினார். இவரது சிந்தனைகளும் மிகவம் மூர்க்கமானவை. இவரது சண்டை போடும் திறன், சீரிய சிந்தனைகள் ஆகியவை பைதுல்லா மசூத்தை ஈர்க்கவே இவர் தெஹரிக் இ தலிபான் அமைப்பின் கமாண்டராக நியமிக்க காரணமாக அமைந்தது.
ஷரியா சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டுபவர் ஹபீஸ் கான். இவரை 2009ம் ஆண்டு தெஹரிக் இ தலிபான் அமைப்பின் ஓரக்சாய் பிராந்தியத்துக்கான தலைவராக நியமித்தனர்.
தலிபான் அமைப்பிலிருந்து விலகல்
பைதுல்லா மசூத் உயிருடன் இருந்தவரை தலிபான் அமைப்பில் தீவிரமாக இருந்தார் ஹபீஸ் கான். மசூத் கொல்லப்பட்டதும் தலைவர் பதவிக்கான மோதல் வெடித்தது. பெரும்பாலானவர்கள் ஹக்கீமுல்லா மசூத் பின்னால் சென்றனர். ஆனால் வலி உர் ரஹ்மானை தலைவராக்க ஹபீஸ் கான் குரல் கொடுத்தார். அது ஏற்கப்படவில்லை.
இருப்பினும் தலிபான் அமைப்பு உடையவில்லை. 2013ம் ஆண்டு ஹக்கீமுல்லா கொல்லப்பட்டார். இதையடுத்து அமைப்பின் தலைவராக தன்னை நியமிப்பார்கள் என்று ஹபீஸ் கான் நினைத்தார். ஆனால் முல்லா பாசுல்லாவை நியமித்து விட்டனர். இதனால் கோபமடைந்த ஹபீஸ் கான் அங்கிருந்து பிரிந்தார். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இஸ்லாமியக் குடியரசை உருவாக்கிய அபு பக்கீர் அல் பக்தாதிக்கு ஆதரவும் தெரிவித்தார்.
அல் கொரசான் பிறந்தது
இந்த நிலையில்தான் அல் கொரசான் அமைப்பு பிறந்தது. இதை உருவாக்கியவர் ஹபீஸ்கான். இது தனிப் பிரிவு அல்ல. மாறாக ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் பிராந்தியத்தில் செயல்பட்டு வந்த பல்வேறு தீவிரவாதிகள் இணைந்த ஒரு பிரிவாகும். கொரசான் என்பது ஒரு மாகாணமாகும். இது ஆப்கானிஸ்தானுக்குள் உள்ளது.
முன்பு அல் கொரசான் அமைப்பு அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கருதப்பட்டது. ஆனால் தற்போது ஹபீஸ் கான் நியமனத்தின் மூலம் இந்த அமைப்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிரதிநிதி என்பது தெளிவாகியுள்ளது. ஆறு முக்கியமான தீவிரவாதிகளுடன் சேர்ந்து அல் கொரசானை அமைத்தார் ஹபீஸ் கான்.
ஆப்கானிஸ்தானில் குழப்பம்
அல் கொரசாவின் பிறப்பு, அல் கொய்தாவின் இருப்பு, தெஹரிக் இ தலிபான், ஆப்கானிஸ்தான் தலிபான் என இப்பிராந்தியத்தில் தீவிரவாத அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் அனைவரும் இணைந்து செயல்படுவார்களா என்ற அபாயமும் இன்னும் உள்ளது.
இதில் அல் கொய்தா, ஆப்கான் தலிபான் ஆகியவற்றுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவு உள்ளது. உண்மையில் பலுசிஸ்தானில்தான் முல்லா உமர் பாதுகாப்பாக ஐஎஸ்ஐயால் பாதுகாக்கப்பட்டு வருகிறார் என்று கூட ஒரு தகவல் உண்டு.
ஐஎஸ்ஐஎஸ்யால் என்ன செய்ய முடியும்
ஹபீஸ் கானின் நியமனம், நமக்கு நல்லதல்ல. பிற தீவிரவாத அமைப்புகளை ஒப்பிடும்போது ஐஎஸ் அமைப்பு மிகவும் செல்வாக்கானது, அபாயகரமானது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த அமைப்பு வலுவாக உள்ளது. மிகப் பெரிய தீவிரவாத அமைப்பாகவும் அது உருவெடுத்துள்ளது. இது இந்தியாவுக்கு நிச்சயம் நல்ல செய்தியல்ல.