தினமும் கிராமங்களில் ரூ.32, நகரங்களில் ரூ. 47 செலவு செய்பவர்கள் ஏழைகள் இல்லையாம்
டெல்லி: நாள் ஒன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ. 32ம், நகரங்களில் ரூ. 47ம் செலவு செய்பவர்கள் ஏழைகளாக கருதப்படமாட்டார்கள் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜன் தலைமையிலான நிபுணர்கள் குழு மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2011-2012ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நியமித்த சுரேஷ் டெண்டுல்கர் குழு நாள் ஒன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ. 27ம், நகரங்களில் ரூ.33ம் செலவு செய்பவர்கள் ஏழைகளாக கருதப்படமாட்டார்கள் என்று தெரிவித்தது. இந்த பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் பரிந்துரைகளை மறுஆய்வு செய்ய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜன் தலைமையிலான நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசிடம் கடந்த வாரம் அளித்தது.
அந்த குழு தனது பரிந்துரையில் நாள் ஒன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ. 32ம், நகரங்களில் ரூ. 47ம் செலவு செய்பவர்கள் ஏழைகளாக கருதப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. அந்த குழுவின் பரிந்துரையின்படி பார்த்தால் மக்கள் தொகையில் 29.5 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.
விலைவாசி விண்ணைத் தொட்டுள்ள நேரத்தில் ரங்கராஜன் குழுவின் பரிந்துரை அவர்கள் நடப்பு விலைவாசியை கணக்கில் கொண்டு தான் ஆய்வு செய்தார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கும் வேளையில் அவையில் பிற கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.