அடுத்த புயல் ரெடியாகிறது.. தமிழகத்தில் மீண்டும் கனமழை கொட்டுமா?
நாடா புயல் கரையைக் கடந்துள்ளதையடுத்து புதிதாக இன்னொரு புயல் உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: அடுத்த 48 மணி நேரத்தில் புதிய புயல் ஒன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகி வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்க கடலில் நாடா புயல் உருவாகி, அது காரைக்கால் அருகில் நேற்றுக் காலை கரையைக் கடந்தது. புயலால் கடுமையான பாதிப்பு தமிழகத்திற்கு ஏற்படும் என்று மக்கள் கவலையடைந்திருந்தனர். இந்நிலையில், வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் நாடா புயல் நம்மைக் கடந்து சென்றுவிட்டது.
நாடா புயல் உருவானதால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை என்று விவசாய பெருங்குடிகள் உள்ளிட்ட தமிழக மக்கள் கவலை அடைந்திருந்த நிலையில் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மலேசிய தீப கற்ப பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது படிப்படியாக வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி வரும் 9ம் தேதி ஆந்திராவிற்கும் ஒடிசாவிற்கும் இடையில் கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயல் தமிழக கடற்கரை நோக்கி வந்தால், பலத்த மழை தமிழகத்தில் பெய்யும் என்றும் வரவில்லை என்றால் வறண்ட வானிலையே அடுத்த 10 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.