ஜனாதிபதி வேட்பாளர் யார்.. பாஜக ஆட்சி மன்றக் குழு இன்று முடிவு
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய இன்று பாஜக ஆட்சிமன்றக் குழு டெல்லியில் கூடுகிறது. அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
டெல்லி: பாஜகவின் ஆட்சி மன்றக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது. இதில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற முடிவு செய்யப்பட உள்ளது.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெறுகிறது.
அனைத்து தரப்பின் ஆதரவை பெற்ற ஒரு வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயற்சித்து வருகிறது. அதேசமயம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளன. இதனால், நாளுக்கு நாள் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தபடி உள்ளது.
பாஜக மூவர் குழு
இந்நிலையில், பாஜக சார்பாக, 3 பேர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவை தெரிவிக்க உள்ளது.
விரைவில் வேட்பாளர் அறிவிப்பு
அதன் அடிப்படையில், ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் 20ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆட்சிமன்றக்குழு கூட்டம்
இந்நிலையில், இன்று பாஜகவின் ஆட்சிமன்றக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது. பகல் 12 மணியளவில் கூடும் இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தலைமை வகிக்கிறார்.
ஜனாதிபதி வேட்பாளர் யார்?
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது பற்றிய ஆலோசனை நடத்தப்படுகிறது. கூட்டத்தின் முடிவில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.