எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை
குடியரசுத் தலைவர் தேர்தல்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பது குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்யப்படவுள்ளது.
டெல்லி: பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை முடிவு செய்ய வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்கின்றன.
குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் ஆளும் கட்சியான பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளராக தங்களது கட்சியை சேர்ந்தவர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
அதற்கான ஆலோசனைகளில் இரு தரப்பும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போட்டி போட்டு கொண்டு வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வருகின்றன.
ஜார்க்கண்ட் ஆளுநர்
பாஜக சார்பில் ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க பாஜக முடிவு செய்துள்ளது. பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு, 20,000 வாக்குகள் குறைவாக உள்ளது. இதற்காக அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்துள்ளது. அதில் அதிமுக வாக்குகளை மிரட்டியே வாங்கி விடலாம்.
காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை பெரிய கூட்டணியை அமைத்து வேட்பாளரை களம் இறக்கவுள்ளது. இக்கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியையும் இணைக்க அது முயற்சித்து வருகிறது. பாஜகவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
வேட்பாளர்கள் யார்
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை கோபால் கிருஷ்ண காந்தி, சரத் யாதவ் மற்றும் மீரா குமார் ஆகியோரின் பெயர்களை பரிசீலித்து வருகின்றன. எனினும் சரத் பவார் இதை மறுத்துள்ளார். பிரணாப் முகர்ஜியையே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று பிகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை ஆலோசனை
இந்நிலையில் தங்கள் வேட்பாளர் குறித்து வரும் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தவுள்ளன. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் யாராலும் எதிர்க்க முடியாத, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருமித்த வேட்பாளரை நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.