ஜனாதிபதி தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க.. மீரா குமார் வேண்டுகோள்
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் மீரா குமார், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார்.
போட்டி வேட்பாளர்
பாஜக அறிவித்துள்ள வேட்பாளரை எதிர்த்து முன்னாள் லோக் சபா நாயகர் மீரா குமார் களம் இறக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. வரும் 28ம் தேதி மீரா குமார் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
எம்பி, எம்எல்ஏக்களிடம் ஆதரவு
இந்நிலையில், தனக்கு வாக்களிக்க எம்எல்ஏக்கள் எம்பிக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். நாடு முழுவதும் சென்று காங்கிரஸ் மற்றும் ஆதரவு கட்சிகளிடம் ஆதரவு கேட்பது என்றும் முடிவு செய்துள்ளார்.
உருக்கமான வேண்டுகோள்
இதனிடையே அவர் உருக்கமான ஒரு வேண்டுகோளை எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு வைத்தார். அதில் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு இறுதியான உரை கல்லாக ஜனாதிபதி அலுவலகத்தை அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ளது.
மனசாட்சிப்படி..
குறுகிய அரசியல் அரசியல் ஆதாயத்திற்காக ஜனாதிபதி அலுவலகம் செயல்பட முடியாது. ஜனாதிபதி தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் தங்கள் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும் என்று மீரா குமார் கூறியுள்ளார்.