ஜனாதிபதி தேர்தல் களத்தில் யார் யார்… வேட்புமனு பரிசீலனை தொடங்குகிறது இன்று
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இன்று யார் முறையாக தவறில்லாமல் வேட்மனு தாக்கல் செய்தவர்கள் மட்டுமே களத்தில் நிற்க முடியும்.
டெல்லி: இந்திய நாட்டின் முதல் குடிமகனை தேர்வு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. அதன் மீதான பரிசீலனை இன்று தொடங்குகிறது.
பாஜக வேட்பாளர்
பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பீகாரின் முன்னாள் கவர்னர் ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது, பிரதமர் மோடி, பாஜகவின் தேசிய செயலாளர் அமித்ஷா, 20 மாநில முதல்வர்கள் உடன் இருந்தனர்.
எதிர்க்கட்சி வேட்பாளர்
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னாள் சபா நாயகர் மீரா குமாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது. மீரா குமார் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர் உடன் இருந்தனர்.
இன்று பரிசீலனை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுகள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. இதில் தவறாக மனு பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்கல் தள்ளுபடி செய்யப்படும்.
Recommended Video
ஜூலை 1ல் வாபஸ்
வேட்புமனுவை வாபஸ் பெற நாளை மறுநாளான ஜூலை 1ம் தேதி கடைசி நாள். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதனைத் தொடர்ந்து ஜூலை 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்.