தினகரனின் நண்பேன்டா மல்லி.. அசிஸ்ட்டண்ட் ஜனா.. டெல்லி போலீசாரின் அடுத்த கொக்கி ஆடிட்டர்?
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவைத் தொடர்ந்து மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
டெல்லி: இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தினகரனின் ஆடிட்டர் கைது செய்யப்படலாம் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ள இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக லஞ்ச பேரம் நடத்தினார் தினகரன் என்பது குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் பணப்பரிமாற்றம் தொடர்பாக திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் மூலம் இந்திய தேர்தல் கமிஷனுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த 25ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் லஞ்ச பணம் கொடுக்க உடந்தையாக இருந்த டிடிவி தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனா கைது செய்யப்பட்டார்.
சிக்கிய ஜனா
மேலும், அவரின் உதவியாளர் ஜனார்த்தனத்தையும் போலீஸ் விசாரித்து கண்காணிப்பில் வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் கூடுதல் விசாரணைக்காக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரனையும், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சென்னையில் விசாரணை
சென்னையில் 3 நாட்கள் விசாரணைக்கு பின்னர் நேற்று மாலை தினகரன் டெல்லி அழைத்து செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக பணப்பரிமாற்றத்திற்கு உதவிய ஹவாலா ஏஜென்ட்டுடன் நேரில் வைத்து தினகரனிடம் விசாரணை நடத்த உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, தினகரனின் வங்கி கணக்கு விபரங்களை அளிக்கவும் டெல்லி போலீஸ் உத்தரவிட்டு உள்ளது.
வங்கி கணக்குகள்..
டிடிவி தினகரனின் 5 எஸ்பிஐ வங்கி கணக்குகளின் விபரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்குகளின் மூலம் பெரிய அளவில் பணம் கைமாறியது அம்பலமாகியுள்ளது.
ஆடிட்டர் கைது?
இதனைத் தொடர்ந்து, தினகரனின் ஆடிட்டரை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். எந்தெந்த வங்கிகளில் இருந்து எவ்வளவு பணம் கைமாறியது? வங்கிக் கணக்கில்லாமல் கைமாறிய தொகை எவ்வளவு என்பது குறித்தெல்லாம் ஆடிட்டரிடம் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த விசாரணையைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.