ஐ.எஸ். இயக்கத்தைவிட்டு தப்பி வந்த ஆரிப் மஜீத் கோர்ட்டில் ஆஜர்! 8-ந் தேதி வரை கஸ்டடி!
மும்பை: ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இருந்து தப்பி வந்த மகாராஷ்டிரா இளைஞர் ஆரிப் மஜீத் இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் 8-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஆரிப் மஜீத், ஷாகீன் தன்கி, பகத் ஷேக் மற்றும் அமான் ஆகிய 4 இளைஞர்கள் கடந்த மே மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புனித தலங்களை தரிசிக்க சென்றனர்.
பின்னர், அவர்கள் இந்தியா திரும்பவில்லை. இந்நிலையில் காணாமல் போன 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி மாயமானவர்களில் ஒருவரான ஆரிப் மஜீத் வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஆரிப் மஜீத் உயிரோடு நேற்று நாடு திரும்பினார்.
அவரை கைது செய்த தேசியப் புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் ஆரிப் மஜீத் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆரிப் மஜீத்தை தேசிய புலனாய்வு அமைப்பினர் ஆஜர்படுத்தினர். ஆரிப்பை வரும் 8-ந் தேதி வரை தேசிய புலனாய்வு அமைப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.