24 தீவிரவாதிகள்.. மொத்தத் தலைக்கும் ரூ. 65 லட்சம் விலை.. அதிரடியாக தகவல் சேகரிக்கும் என்ஐஏ
டெல்லி: வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 24 அறிவிக்கப்பட்ட தீவிரவாதிகளைப் பிடிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் குறித்த தகவல்களைப் பெற அது ரூ. 65 லட்சம் நிதியை செலவிட உள்ளது.
இந்த 24 தீவிரவாதிகள் குறித்த பட்டியலையும் என்ஐஏ தயாரித்துள்ளது. இவர்களின் விவரத்தையும் சேகரித்துள்ளது. இதை வைத்து இவர்களைப் பிடிக்கவுள்ளது. இவர்கள் குறித்த துப்புக்களை சேகரிக்கவே இவ்வளவு பெரிய தொகையை அது செலவிடவுள்ளது.
நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (காப்லாங், காங்லீ யாவோல் கன்னா லுப், காங்லீபாக் கம்யூனிஸ்ட் தேசிய சோசலிஸ்ட் கட்சி, காமத்பூர் விடுதலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த தீவிரவாதிகள் இவர்கள்.
ராணுவத்தினர் மீது தாக்குதல்
இந்த அமைப்பினர் பல தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 4ம் தேதி மணிப்பூரின் சன்டல் மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். அதில் 18 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தமாக பிடிக்க திட்டம்
இந்த 24 பேரையும் ஒருவர் விடாமல் வளைத்துப் பிடிக்க என்ஐஏ தீவிரமாக உள்ளதாம். இவர்களைப் பிடித்து விட்டால் வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல்கள் குறையம் என்பது என்ஐஏவின் அனுமானம்.
அமைதி நிலவ வேண்டும் என்றால்
இப்பகுதியில் அமைதியைக் கொண்டு வர மத்திய அரசும், இந்த மாநில அரசுகளும் தீவிரமாக உள்ளன. எனவே அமைதி நனவாக வேண்டும் என்றால் இவர்களைக் கைது செய்வது அவசியமாகும்.
பணப் பரிசு
இந்த 24 பேரையும் பிடித்துத் தருவோர் அல்லது முக்கியமான துப்பு கொடுப்போருக்கு பணப் பரிசுகளையும் என்ஐஏ ஏற்கனவே அரிவித்துள்ளது. ரூ. 2 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை விலை வைக்கப்பட்டுள்ளது.
இந்திய மியான்மர் எல்லையில்
இந்த 24 பேரும் இந்திய, மியான்மர் எல்லைப் பகுதிகளில்தான் பதுங்கியுள்ளனர். இந்தியப் படையினர் நெருக்கடி அதிகரித்தால் மியான்மருக்குள் ஓடிப் போய் விடுகிறார்கள். இதனால்தான் இவர்களைப் பிடிக்க முடியாத நிலை நிலவுகிறது. ஆனால் தற்போது இந்தியப் படையினர் தீவிரமாக உள்ளதால் 24 பேருக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.