மகளின் பெயரை ஒளிபரப்பிய பிபிசி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: நிர்பயா தந்தை
டெல்லி: என் மகளின் பெயரை வெளியிடக்கூடாது என்று கூறியும் ஒளிபரப்பிவிட்டனர். இதற்காக பிபிசி நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார். இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூறிய அவர் தற்போது பிபிசி மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
மத்திய அரசு விதித்த தடையையும் மீறி 'இந்தியாவின் மகள்' ஆவணப்படம் பிரிட்டனில் பிபிசியில் ஒளிபரப்பபட்டது. இதை பிபிசி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. 59 நிமிடங்கள் 53 வினாடிகள் ஓடும் இந்த ஆவணப்படத்தில் நிர்பயாவின் பால்ய பருவப் படம் வெளியிடப்பட்டதோடு அவரது இயற்பெயரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாத்கார சம்பவம்
கடந்த 2012-ஆம் ஆண்டு, டிசம்பர் 16-ஆம் தேதி, டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார். மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டு 13 நாட்களுக்குப் பின் சிகிச்சை பலனின்றி அப்பெண் மருத்துவமனையில் பலியானார்.
குற்றவாளியின் பேட்டி
இந்தியா மட்டுமல்லாமல் உலக மக்களிடையே மாபெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்திய சம்பவம் பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்ஸி உட்வின் என்பவர் தயாரித்துள்ளார். "இந்தியாவின் மகள்" என்ற அந்த ஆவணப்படத்தில் 6 குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் அளித்துள்ள பேட்டி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு தடை
இதனை மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் பி.பி.சி, என்டிடிவியில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, அந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பவும், தடைவிதித்தது.
தந்தை பேட்டி
குற்றவாளியை பேட்டி கண்டதற்கும், அவனது பேட்டியை ஒளிபரப்புவதற்கும் நாடுமுழுவதும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நிர்பயாவின் தந்தையோ, அக்குற்றவாளியின் அந்த கருத்தை பொதுவில் ஒளிபரப்ப வேண்டும், அதனை அனைவரும் பார்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
பிபிசியில் ஒளிபரப்பு
இந்த நிலையில் தடையை மீறி ஆவணப்படம் நேற்று பிபிசியில் ஒளிபரப்பானது. தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தைக் காண பொதுமக்கள் ஆர்வம் தெரிவித்ததால் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக பிபிசி தெரிவித்தது.
ஒளிபரப்பில் சர்ச்சை
இந்த ஆவணப்படத்தில் நிர்பயாவின் பால்ய பருவப் படம் வெளியிடப்பட்டதோடு அவரது இயற்பெயரும் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு நிர்பயாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சட்டப்படி நடவடிக்கை
தங்களது வேண்டுகோளை மீறியும் தங்கள் மகளின் பெயர், அவரது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கே சவால்
"பிபிசி நிறுவனம் இந்திய அரசுக்கே சவால் விடுத்துள்ளது. இதற்காக அவர்களுக்கு தகுந்த பதிலடி விரைவில் கொடுக்கப்படும்" என்றும் நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்