ஊழல் சொத்து சேர்க்கும் பாவ செயலை செய்பவர்களுடன் என்னால் இருக்க முடியாது.. நிதிஷ் குமார் ஆவேசம்
ஊழல் மூலம் சொத்து சேர்க்கும் பாவச் செயலை செய்பவர்களுடன் என்னால் இருக்க முடியாது என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா: பிகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிதிஷ் குமார், ஊழல் மூலம் சொத்து சேர்க்கும் பாவச் செயலை செய்பவர்களுடன் என்னால் இருக்க முடியாது என்று லாலுவை அட்டாக் செய்து பேசியுள்ளார்.
பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளமும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது. கூட்டணி ஆட்சி சுமார் 2 ஆண்டுகளை எட்டியிருந்த நிலையில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
ரயில்வே ஓட்டல்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ விசாரணையை மத்திய அரசு முடக்கி விட்டது. இதனால் துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என்று நிதிஷ் குமார் கூறினார். இதற்கு லாலு தரப்பு மறுப்பு தெரிவித்ததையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்.
அதனைத் தொடர்ந்து நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றார். சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் 132 வாக்குகள் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நிதிஷ் குமார், பிகார் மக்கள் அளித்த தீர்ப்பானது அவர்களுக்கு சேவைப் பணியாற்றுவதற்கு. மக்கள் நீதிமன்றம்தான் பெரிய நீதிமன்றம், மக்களுக்காகப் பணியாற்றுவதே என்னுடைய கடமை. ஒரு குடும்பத்திற்காக என்னால் பணியாற்ற முடியாது என்று கூறினார்.
மேலும், மதச்சார்பின்மை குறித்து தனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் மதச்சார்பின்மை என்பது நடைமுறைப்படுத்தக் கூடிய விஷயமாகும் என்றும் தெரிவித்த நிதிஷ், மதச்சார்பின்மை என்ற பெயரில் ஊழல் வழியாகச் சொத்துக்கள் சேர்க்கும் பாவ செயலைச் செய்பவர்களுடன் தன்னால் இருக்க முடியாது என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.