பீகார் அரசு கொண்டு வந்த மதுவிலக்கு சட்டம் செல்லாது: பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி!
பாட்னா: பீகார் அரசு கொண்டு வந்த மதுவிலக்கு சட்டம் செல்லாது என்று பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பீகாரை பின்பற்றி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் பீகாரில் மதுவிலக்கு அமல் சட்டத்துக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஏ.என்.சிங் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். ஒருவரது உணவுப் பழக்கத்தை அரசு தீர்மானிக்க முடியாது என அம்மனுவில் ஏ.என்.சிங் வலியுறுத்தியிருந்தார்.
இந்த பொதுநலன் வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம் இன்று நிதிஷ்குமார் அரசு கொண்டு வந்த மதுவிலக்கு அமல் சட்டம் சட்டவிரோதமானது என அதிரடியாக தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து பீகார் அரசு மேல்முறையீடு செய்யக் கூடும் என கூறப்படுகிறது.