பீகாரில் அனைத்து வீடுகளுக்கும் இலவச மின் இணைப்பு: நிதிஷ்குமாரின் அடுத்த அதிரடி!
பாட்னா: பீகார் மாநிலத்தில் மின் இணைப்பு இல்லாத அனைத்து வீடுகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்க முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமார் முதல் அதிரடியாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என பிரகடனம் செய்தார். தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பை நிதிஷ்குமார் வெளியிட்டிருந்தார்.
தற்போது அடுத்த அதிரடியாக மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 2017ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ1,800 கோடி செலவு
அதே நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான உரிய கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ1,500 முதல் ரூ1,800 கோடி வரை செலவாகும் என கருதப்படுகிறது.
அனைத்து குடும்பங்களுக்குமே...
பீகார் தேர்தலின் போது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக மின் இணைப்புகள் வழங்கப்படும் என நிதிஷ்குமார் உறுதியளித்திருந்தார். தற்போது மின் இணைப்பு இல்லாத அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள சுமார் 50 முதல் 60 லட்சம் குடும்பங்களுக்கும் மின் இணைப்பு இலவசமாக கிடைக்க உள்ளது.
அன்றைய நிலைமை
பீகாரில் மொத்த முள்ள 39,073 கிராமங்களில் 2,719 கிராமங்கள் இன்னமும் மின்வசதி பெறாதவை. கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பீகாரில் நகர்ப்புறங்களில் 6 முதல் 8 மணிநேரமும் கிராமப்புறங்களில் 2 முதல் 3 மணிநேரமும்தான் மின்சாரம் கிடைத்து வந்தது.
தலைகீழாக மாறிய சூழ்நிலை
தற்போது நகரப்புறங்களில் 22 முதல் 24 மணிநேரமும் கிராமங்களில் 15 முதல் 16 மணிநேரமும் மின்சாரம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.