(சீன) நீர்மூழ்கி கப்பல்கள் வந்து போவதெல்லாம் சகஜம்தான்: இந்தியாவுக்கு இலங்கை திமிர் பதில்!
இந்தியா வந்த இலங்கை கடற்படை தளபதி ஜெயந்த பெரேராவிடம், கடந்த மாதம் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் அந்நாட்டுக்கு வந்தது குறித்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் நடமாட்டம் இந்தியாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீனா நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் அதிருப்தி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ருவன் வணிகசூரிய அளித்த பதில்:
இலங்கை இந்திய பெருங்கடலுக்கு மத்தியில் அமைந்துள்ளது. புவியியல் ரீதியிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளின் கடற்படை கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் நல்லெண்ண அடிப்படையில் வந்து செல்கின்றன.
இது பொதுவான ஒரு விஷயம். 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு மொத்தம் 206 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெயின், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து, துருக்கி, மலேசியா, தென்கொரியா, புருனே, மாலத்தீவு, இத்தாலி, பிரான்ஸ், ஈரான், சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், சீசெல்ஸ் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் 206 கப்பல்களும் வந்து சென்றுள்ளன.
2010 ஆம் ஆண்டு 36 கப்பல்களும், 2011 ஆம் ஆண்டு 49, 2012 இல் 34, 2013 இல் 48, 2014 ஆம் ஆண்டு இதுவரை 39 கப்பல்கள் வந்து சென்றுள்ளன.
இவ்வாறு வணிகசூரிய பதிலளித்துள்ளார்.