வழக்கு குறித்து எந்த கருத்தும் சொல்ல முடியாது.. டெல்லியில் தினகரன் பேட்டி
டெல்லி: வழக்கு குறித்து தற்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என டெல்லியில் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் தரகர் சுகேஷ் சந்திரா முதலில் கைது செய்யப்பட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனன் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரன், மல்லிகார்ஜுனன் ஆகியோரை 5 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்த போலீசார், ஆதம்பாக்கம், கொளப்பாக்கம், பெரம்பூர், திருவேற்காடு, தினகரனின் அடையாறு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகன், தனியார் செல்போன் நிறுவன மேலாளர் டேனியல், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கோபி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர். மேலும் தினகரனின் வழக்கறிஞர் மோகன் ராஜ் வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் சென்னை விசாரணையை முடித்துக் கொண்டு தினகரனையும், மல்லிகார்ஜுனனையும் டெல்லி உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான போலீஸார் அழைத்துக் கொண்டு டெல்லி புறப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தினகரன், வழக்கு குறித்து தற்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என கூறினார். தொடர்ந்து அவர் டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.