மத மாற்ற சர்ச்சை... ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் அமைச்சர்கள் அவசர சந்திப்பு!
டெல்லி: முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் இந்து மதத்திற்கு மாற்றுவதாக கூறி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்தி வரும் நிகழ்ச்சிகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மத்திய அமைச்ச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கத்காரி ஆகியோர் ஆர்.எஸ். எஸ் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கத்காரி வீட்டில் வைத்து இிந்த ஆலோசனை நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் சார்பில் பைய்யாஜி ஜோஷி, சுரேஷ் சோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கேரளா, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் இந்த மத மாற்ற நிகழ்வுகளை வி.எச்.பி நடத்தியுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை அழைத்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், அறிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமரின் பொருளாதார சீர்திருத்த நோக்கங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்வது என்றும் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் அமீத் ஷாவும் உடன் இருந்தார். ஆனால் இது வழக்கமான சந்திப்புதான் என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இந்த சந்திப்பின்போது கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரசாரம் மேற்கொள்வது என்றும் இரு தரப்பு தலைவர்களும் முடிவு செய்துள்ளனராம்.
அதேபோல, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சியினர் தடுத்து வருவது குறித்து நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொள்வது என்றும் இவர்கள் முடிவு செய்துள்ளனராம்.
முன்னதாக இந்தியா இந்து நாடு என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் விஎச்பி நடத்தி வரும் மத மாற்ற நிகழ்ச்சிகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இரு அவைகளையும் நேற்று எதிர்க்கட்சியினர் ஸ்தம்பிக்க வைத்தனர்.
ராஜ்யசபாவைப் பொறுத்தவரையில் பாஜக பெரும்பான்மை இல்லாத கட்சியாக உள்ளதால் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சியின் தயவு தேவைப்படுகிறது. எனவே மதமாற்ற விவகாரம் குறித்து அது இறங்கிப் போக விரும்புவதையே, இந்த அமைச்சர்கள் - ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்திப்பு உணர்த்துகிறது.
இருப்பினும் விஎச்பி நடத்தி வரும் மதமாற்ற நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை பிரதமர் மோடி பகிரங்கமாக எந்தக் கருத்தையும் சொல்லாமல் உள்ளார். இதுதான் எதிர்க்கட்சியினரை உசுப்பேற்றி விட்டுள்ளது. பிரதமர் இந்த மதமாற்றங்களை ஆதரிக்கிறாரா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம், கட்டாயமாக ஒருவரை மதம் மாற்றுவதை பாஜக ஏற்காது என்றும் கட்டாய மதமாற்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் என்றும் பாஜக கூறி வருகிறது.