தொடர்ந்து கோமாவில் ஜஸ்வந்த் சிங்: எந்த முன்னேற்றமும் இல்லை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தொடர்ந்து கோமாவில் இருப்பதாகவும், அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்(76) கடந்த 8ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் வழுக்கி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்து மயங்கிக் கிடந்த அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பிறகு கோமாவுக்கு சென்ற அவர் தொடர்ந்து அதே நிலையிலேயே உள்ளார். அவருக்கு சுயநினைவை திரும்பக் கொண்டு வரும் முற்சியில் மருத்துவர்கள் குழு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் கூறுகையில்,
ஜஸ்வந்த் சிங்கின் நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து கோமாவில் தான் உள்ளார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றார்.