பணம் இல்லை: டயர், குப்பையை வைத்து மனைவியின் உடலை தகனம் செய்த கணவர்
போபால்: மத்திய பிரதேசத்தில் தகனம் செய்ய பணம் இல்லாததால் ஒருவர் தனது மனைவியின் உடலை குப்பை, டயர்களை வைத்து தகனம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீமுச் கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியினத்தவரான ஜகதீஷ் பில்(65). நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவரது மனைவி நஜோ பாய் உயிர் இழந்தார். இதையடுத்து ஜகதீஷ் தனது மனைவியின் உடலை முறைப்படி தகனம் செய்ய எடுத்துச் சென்றார்.
இடுகாட்டில் இருந்த ஊழியர்கள் உடலை தகனம் செய்ய ரூ.2 ஆயிரத்து 500 கேட்டனர். தினக்கூலியான அவரிடம் வெறும் ரூ.250 இருந்தது. இடுகாடு ஊழியர்களோ தகனம் செய்ய பணம் இல்லை என்றால் உங்கள் மனைவியின் உடலை ஆற்றில் வீசிவிடுங்கள் என்றனர். தகனம் செய்ய பணம் இல்லாதவர்கள் சடலங்களை ஆற்றில் வீசுவது அப்பகுதியில் வழக்கமாக நடக்கும் ஒன்று. ஆனால் அவருக்கு தனது மனைவியின் உடலை முறைப்படி தகனம் செய்ய விருப்பம்.
இதையடுத்து ஜகதீஷ் இடுகாட்டுக்கு அருகே குழி தோண்டிக் கொண்டிருந்தார். இது குறித்து அறிந்த அப்பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரி ஜகதீஷுக்கு தனது சொந்த பணத்தில் ரூ. 1,500 கொடுத்தார்.
அந்த பணத்தில் மரக்கட்டை வாங்கினார் ஜகதீஷ். கட்டைகள் போதாததால் அவர் குப்பை, டயர்கள், பேப்பர்களையும் கட்டைகளோடு சேர்த்து தனது மனைவியின் சடலத்திற்கு எரியூட்டினார்.