ஜெயலலிதாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்ற ஆட்சேபனை இல்லை: கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ்
பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்ற கர்நாடக அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று அம்மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் சிறைக்கு சென்று நேற்றுடன் 17 நாட்கள் ஆகின்றன.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மனு வருகிற 17-ந் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள்..
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்ப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். கர்நாடக அரசு இதற்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது.
சட்டம்- ஒழுங்கு அச்சம்
மேலும் இதனால் ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமோ என்றும் கர்நாடகம் அஞ்சுகிறது.
ஆட்சேபனை இல்லை
இந்த நிலையில் ஜெயலலிதாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்றுவதில் கர்நாடக அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
முறைப்படி கடிதம்
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஜெயலலிதாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்றுவதில் கர்நாடக அரசுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் சிறைத்துறை முறைப்படி கடிதம் வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்ற அனுமதி தேவை
இதற்கான உரிய அனுமதியையும் பெற வேண்டும். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகத்தில் நடைபெற்றது. அதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி பெற வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார்.