பாவனா கடத்தல் வழக்கிலிருந்து யாரும் தப்ப முடியாது.. பினராயி விஜயன் உறுதி
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி காரில் வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். அவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, பல்சர் சுனி என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் தேடுதல் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில், நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாவனா கடத்தல் வழக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதனால் தீலிப் மனைவி காவ்யா மாதவன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.