கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழா.. தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை - மத்திய அரசு
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழாவில் தமிழக மீனவர்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
டெல்லி: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்கு அந்தோணியர் கோயில் உள்ளது. தற்போது கச்சத் தீவில் புனரமைக்கப்பட்டுள்ள அந்தோணியார் தேவாலய திறப்பு விழா வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவை இலங்கை அரசு நடத்துகிறது. இந்த விழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை இன்று தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெறும் இந்தத் திறப்பு விழா சிறிய விழாதான். எனவே தமிழக மீனவர்கள் இதில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. இந்தத் தேவாலயத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.