மானிய விலை காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்க திட்டமா? மத்திய அமைச்சர் பிரதான் பதில்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி ஓராண்டுக்குள் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் அதிகபட்சம் 12 மானிய காஸ் சிலிண்டரை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று மோடி அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.
இந்நிலையில் மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்கப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பேட்டி: கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மானிய சிலிண்டர்களுக்கான மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்திற்கு வங்கி கணக்கு மட்டுமே அவசியமாகும். ஆதார் அவசியம் கிடையாது. இப்போது நாட்டின் 54 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும்.
அதேபோல, ஆண்டுக்கு 12 சிலிண்டர் அளிக்கும் நடைமுறையில் மத்திய அரசு எந்த மாற்றமும் கொண்டுவராது. வழக்கம்போல, மக்கள் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.