அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை குறைக்க எந்தத் திட்டமும் இல்லை– மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
டெல்லி: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை தற்போதைக்கு குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 இல் இருந்து 58 ஆக குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, டெல்லி நாடாளுமன்றத்தில் மத்திய பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதன்படி, "மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 இல் இருந்து 58 ஆக குறைக்கும் திட்டம் இல்லை. கடந்த 1997 ஆம் ஆண்டு, ஐந்தாவது ஊதியக்குழுவின் சிபாரிசுப்படி மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.
2010-2011 நிதி ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 85 ஆயிரத்து 963 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. 2011-12 ஆம் நிதியாண்டில் ரூபாய் 92 ஆயிரத்து 265 கோடியும், 2012-13 ஆம் ஆண்டில் ரூபாய் 1 கோடியே 4 லட்சத்து 759 கோடியும் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.