டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவா? மறுக்கிறது அணுசக்தி ஆணையம்!
டெல்லி: டெல்லி விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் கதிரியக்க கசிவு ஏற்பட்டதாக வெளியான தகவல்களை இந்திய அணுசக்தி ஆணையம் மறுத்துள்ளது.
துருக்கியில் இருந்து நேற்று 4.33 மணி அளவில் துருக்கி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தது. பின்பு அந்த விமானத்தில் இருந்து சரக்குகள் இறக்கப்பட்டன.
அப்போது டெல்லி தனியார் மருத்துவமனைக்காக கொண்டு வரப்பட்ட மருந்து பெட்டிகளை தனியாக பிரித்தபோது அந்த பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த மஞ்சள் நிற திரவநிலை மருந்தில் இருந்து திடீரென கதிரியக்க கசிவு ஏற்பட்டது.
இதையறிந்த விமான நிலைய அதிகாரிகள், இது குறித்து உடனடியாக விமான நிலைய பேரிடர் மேலாண்மை மைய மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அணுசக்தி துறைக்கு கதிரியக்கம் பற்றி தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் அணுசக்தி ஒழுங்கு முறை வாரிய ஆய்வு நிபுணர்கள் விமான நிலையம் விரைந்தனர். அவர்கள் சரக்குகள் கையாளும் பகுதியை உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
மத்திய அணுசக்தி துறை செயலாளரும், அணுசக்தி ஆணைய தலைவருமான ஆர்.கே. சின்கா, கதிரியக்கம் ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துருக்கியில் இருந்து டெல்லி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 10 மருந்து பாக்கெட்டுகளில் 4 பாக்கெட்டுகள் சேதமடைந்து இருந்ததால் அதில் இருந்து இந்த கதிரியக்கம் ஏற்பட்டதை உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து எங்களுக்கு தெரிவித்தனர்.
பின்னர் அந்த பாக்கெட்டுகள் டெல்லியில் உள்ள எங்களது ஆய்வகத்துக்கு கொண்டு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டன என்றார்.